ச. செந்தில் குமரன்'s blog
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் இணைந்து 06.01.2014 அன்று சென்னை எத்திராசு மகளிர் கல்லூரியில் நடத்திய தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கில் கலந்து கொண்டேன். இந்த கருத்தரங்கம் மூன்று அமர்வுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது அமர்வில் திரு.மாஃபா.க. பாண்டியராசன் அவர்கள் (நிறுவனா், மனிதவள மேம்பாட்டு அமைப்பு, சட்டமன்ற உறுப்பினா், விருதுநகா்) தலைமையில், "தமிழில் திறவூற்று மென்பொருட்கள்" என்ற எனது கட்டுரையினை வாசித்தேன். எனது அமர்வில் திரு. இளங்கோவன், புதுச்சேரி மற்றும் கவிஞர் திரு. தங்ககாமராசு முதலிய கட்டுரையாளர்கள் இடம்பிடித்திருந்தனர்.
இந்த கருத்தரங்கில் இடம்பெற்ற எனது கட்டுரையினை கீழே காணலாம். இந்த கட்டுரை உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை வெளியிட்டுள்ள "தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பில்" இடம்பெற்றுள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் உயர் நிலை கருத்தரங்கம் மதுரையில் 23 நவம்பர், 2013 அன்று நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை செயலர் முனைவர் மூ. இராசாராம் இ.ஆ .ப., மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் இல. சுப்பிரமணியன் இ. ஆ. ப., தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் முனைவர் க. பசும்பொன் மற்றும் பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் நான் "கணினியில் தமிழ் மொழி வளர்ச்சி" என்ற தலைப்பில் என் கருத்துக்களை பகிர்ந்தேன், அதை கீழே இணைக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.
இந்த புகைப்படத்தை தெய்வத் தமிழ் மடலாடற் குழுவில் பகிர்ந்த கவிஞர் இரா. இரவி அவர்களுக்கும், அதை எனக்கு சுட்டிக்காட்டிய எனது பால்ய நண்பர் திரு. பாலசுந்தரம் அவர்களுக்கும் நன்றி.
1) எதைத்தேன் என நான் நினைத்தேன்?
அதைதேன் என எண்ணி கவிழ்ந்தேன் ;)
2) உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும், மரணப்படுக்கையிலும் மறவாது கண்மணியே!
எனக்கு அரை மணி நேரத்தில் மரணம் என்ற நிலைவரும்பொழுது, எதனை சிந்திக்க? தாயா? தாரமா? நண்பனா? எதிரியா? தோழியா? வேசியா? சொர்கமா? நரகமா? :)
3) வீழ்வேன் என்று நினைத்தாயோ? இவ்வாழ்க்கைக்கு சொந்தக்காரன் நான் (கர்வம் தான்), என்னால் வீழ்ந்தெழ முடியும்!
4) பாரதியாய் நான் வாழ, பலநூறு தவம் கண்டு, பரதேசியாய் திரிந்தலைந்து பார்த்துவிட்டேன், இனியும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? நான் பாரதி வம்சம்!
சிறு வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது வார விடுமுறைகளில் சனிக்கிழமைகளை விட ஞாயிறுகள் புத்துணர்வை ஏற்படுத்தும், ஏனெனில் அன்று தான் தொலைக்காட்சியின் முன் தவமிருக்க உகந்த நாள். இதற்கு பல காரணங்கள் இருப்பினும், காலையில் அரை மணி நேரம் டி. டி சேனலில் ஒளிபரப்பப்படும் சார்லி சாப்ளின் படங்கள் மிகவும் மகிழ்ச்சி தருபவை. இந்த அப்பாவி மனிதன் செய்யும் பல கோணங்கி சேஷ்டைகளைக் கண்டு, கண்ணில் நீர் வர சிரித்து மகிழ்ந்த நாட்களை மறக்க முடியாது. இந்த சார்லி சாப்ளின் வாழ்க்கை கதையை என். சொக்கன் அவர்களின் எழுத்துக்களில் சமீபத்தில் படித்தேன்.
"எல்லா நகைச்சுவை நடிகரின் பின்ணணியிலும் சிலபல சோகங்கள் நிறைந்திருக்கும்."
இது சார்லி சாப்ளின் வாழ்க்கைக்கும் பொருந்தும். இவர் உலக மக்கள் அனைவரையும் தன் திறமையால் சிரிக்க வைத்தார். சார்லி சாப்ளின் வெறும் நகைச்சுவை நடிகர் என்று தான் எண்ணியிருந்தேன், ஆனால் அதையும் தாண்டி அவர் ஒரு சிறந்த இயக்குனர், கதாசிரியர், இசையமைப்பாளர், படத் தொகுப்பாளர், இன்னும் பல துறைகளில் சிறந்து விளங்கினார். சுருங்க சொல்ல வேண்டுமெனில் நம்ம ஊரில் டி. ராஜேந்தர் செய்த அனைத்தையும் அவர் அன்றே செய்தார், எனினும் சார்லி சாப்ளின் தான் இவர்களுக்கு முன்னோடி; இன்று டி. ராஜெந்தரின் சரக்கு தற்போதைய தலைமுறையினரின் முன் செல்லவில்லை, ஆனால் சார்லி சாப்ளின் வாழும் வரை அவர் எடுத்த படங்கள் அனைவரையும் கவர்ந்தது, ஏன் இன்றும் பலரை கவர்ந்து கொண்டிருக்கின்றது. (டி. ராஜேந்தரை சாப்ளினுடன் ஒப்பிட்டது ஒரு நல்ல ஒப்பீடு இல்லை என்பது உண்மை; என் அறிவுக்கு எட்டியது இதுதான்).
சார்லி சாப்ளினின் வளர்ச்சி அசாதாரணமானது, மிக குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்று நிரந்தரமாக நின்றவர் அவர். தன் கடும் உழைப்பு மற்றும் தொடர் முயற்சிகளால் சிகரங்களை தொட்டவர் சார்லி சாப்ளின், அவர் வாழ்க்கையின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை பலஉள. சினிமா ஊமையாக இருந்த போதே, தன் படங்களின் காட்சி அமைப்பின் மூலம் மக்களிடம் பேசியவர் சார்லி சாப்ளின். இத்தகைய மாபெரும் கலைஞனின் வாழ்வை நம் கண்ணெதிரே தோன்ற வைக்கிறார் என். சொக்கன். சில இடங்களில் ஒரு காலத்தில் இருந்து பல வருடங்கள் பயணப்பட்டு பின் நிகழ்காலத்தை விளக்கியிருக்கிறார், இது சில சமயம் புத்தகத்தின் தொடர்ச்சியை பாதித்தாலும், தேவையான ஒன்றாகவே அமைந்துள்ளது, இதனை என். சொக்கன் அவர்கள் சுட்டிக் காட்டவும் தவறவில்லை.
இது நாள் வரை எனது பழைய வலைப்பதிவான stylesen.org வாயிலாக என் தமிழ் பதிவுகளை வெளியிட்டுக்கொண்டிருந்தேன். இனி எனது எல்லா தமிழ் பதிவுகளையும் இந்த வலைப்பதிவில் நீங்கள் படித்து மகிழலாம். பழைய பதிவுகள் அனைத்தையும் stylesen.org ல் தொடர்ந்து படிக்கலாம், இங்கு புதிய பதிவுகள் மட்டுமே இடம்பெறும்.
ஏனோ மனிதா இப்படி ஆனாய்?
தெரிந்தே சென்று குழியில் விழுந்தாய்
உந்தன் உருவம் நீயே மறந்தாய்
ஊரார் உருவம் உன்னில் பதித்தாய்
ஏனோ மனிதா இப்படி ஆனாய்?
இதயம் என்னும் இலக்கம் இழந்தாய்
பார்வைக்கு ஏங்கும் பழியினை பெற்றாய்
சொல்லில்சாகும் சோகம் சுமந்தாய்
ஏனோ மனிதா இப்படி ஆனாய்?
எண்ணித் துணியும் எண்ணம் இழ்ந்தாய்
வாழ்வை தேடும் வாட்டம் தொலைத்தாய்
வானே எல்லை என்பதை புதைத்தாய்
ஏனோ மனிதா இப்படி ஆனாய்?
காதல் என்னும் கடலில் விழுந்தாய்
காலம் முழுதும் கற்பனை வளர்த்தாய்
கண்ணின் இமைபோல் உனையே
கடைசிவரை நானிருந்து காப்பேன்
விண்ணும் மண்ணும் சாகும்
இருவரும் பின்னும் வாழ்வோம்
காதல் கொண்டேன் உன்மேல்
சாதல் நீயின்றி சுகமே
ஈதல் நினதன்பு குணமே
ஈந்தாய் உனதன்பு மனமே
பிரம்மன் அவனது வாழ்வில்
திறமாய் செய்தது நினையே
கண்முன் கடவுளே வரினும்
உன்முன் அவரெல்லாம் சருகே
நீயின்றி வாழும் நிலமோ
நீரின்றி வாழும் நிலையே
தீயின்றி ஏது வெளிச்சம்
நீயின்றி எதற்கு சுவாசம்
இதற்கு முன்பு இப்படி ஒன்று
இருந்த தென்று என்ன சான்று?
இதயச் சுவரில் எழுதிய சொல்லை
இன்னும் ஏன்நீ வெளியிட வில்லை?
இனிபோய் நீயும் வெளியிடு வாயெனில்
இனிவரும் விளைவுகள் நேரிடும் உனக்கே
இடியும் தாங்கும் இதயம் அன்று
இரண்டே சொல்லில் இறந்தே போகும்
இதயச் சுவரும் இருகிப் போகும்
இனிய இதயம் வெம்பிச் சாகும்
இளமை முழுதும் தனிமை ஆகும்
இனிமை இளமையில் இன்மை ஆகும்
இதற்கு முன்பு இப்படி ஒன்று
இருந்ததென்று இதுவே சான்று!
வீணர் கூடி விளக்கம் அளித்து
விதவை எனுமோர் பட்டம் புனைந்து
வண்ணப் புடவை வேண்டாம் என்று
வெள்ளைப் புடவை போதும் என்றனர்!
பாரதி கண்ட புதுமை பெண்கள்
பாரதம் முழுதும் பரவிக் கிடக்க
பாகம் பிரிக்கும் பால்நிற ஆடை
பழக்கம் இன்று வேண்டும் என்றனர்
இறைவா! மங்கலம் தரத்தான் பெண்ணைபடைத்தாய்
இன்று ஏனோ அமங்கல ஆடை
இணைந்தவன் இறுதிச் சடங்கு முடிந்ததும்
இருளைக் குறிக்க வெள்ளை நிறமோ?
கணவன் பிரிந்தது கண்ணில் இருக்க
கண்டவர் சிரிக்க மல்லிகை மறியலோ?
கண்கவர் ஆடையை விதவை அணிந்து
மண்ணின் மைந்தா புவியில் நிலைப்பாயா?
மதங்கள் இல்லாத மானுடம் செய்வாயா?
கண்ணின் உறக்கம் கழற்றி எரிவாயா?
வித விதமான வேற்றுமை கலைவாயா?
விழுப்புண் ஏந்திய வீரன் ஆவாயா?
விந்தைகள் செய்து வியக்க வைப்பாயா?
புழுமின் புரளும் கடல்களை காப்பாயா?
புகைப்பதை இன்றுடன் புறக்கணித்து விடுவாயா?
கலகம் இல்லாமல் கவனங்கள் ஈர்ப்பாயா?
கடன்கள் இல்லாமல் கன்னியம் புரிவாயா?
உலகம் உணர உயர்ந்து எழுவாயா?
உன்னை உலகம் அரிய நடப்பாயா?
அறிவை வளர்க்க ஆசை கொள்வாயா?
அழிவை எதிர்க்க அறிவை வளர்ப்பாயா?